Tamil and English books

சமீபத்தில் இரண்டு நூல்கள் படித்து முடித்தேன். ஒன்று முப்பது வயதான ஒரு நகர நாகரீக மங்கையின் முதல் நூல், ஆங்கிலத்தில் எழுதியது.  நகரத்தில் வாழும் ஒரு இளம் தம்பதியைப்  பற்றியது. சுலபமான வார்த்தைகள், எளிய சொற்றொடர்கள், புத்தகம் முழுதும் மிக மெலிதாய் இழையோடும் நகைச்சுவை என்று சில நல்ல சேதிகள் நிறைந்திருந்தன.  இரண்டாவது, அறுபது வயதுக்கும் மேலான ஒரு முதியவர் தமிழில் எழுதியது. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இவர் கதைகள் எழுதி வருகிறார். எப்படியும் ஒரு ஆயிரம் கதைகள் எழுதி இருப்பார். சில திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். செல்வராகவன், சங்கர் போன்ற பல பெரிய இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதி இருக்கிறார்.

தமிழகத்தின் சிறுநகரங்களில் இருக்கும் வயதான பெண்கள் எப்படி நம் சன் டிவி  நாடகங்களில் மாமியார்-மருமகள், உறவுகள் பற்றி பார்த்து பார்த்து மூளையை மழுங்கடித்துக் கொள்கிறார்களோ, அதைப் போல நகரத்தில் வாழும் பெண்களும், பணக்காரப் பெண்களும் (சில ஆண்களும்) ஆங்கில தொலைகாட்சித்  தொடர்களுக்கு அடிமைகள். பிரெண்ட்ஸ் , ஹவ் ஐ மெட் யுவர் மதர் போன்றவை இவ்வாறு உணர்வுகளை அதிகப்படியாய் சித்தரிக்கும் தொடர்கள்.

 என் மேற்கத்திய நண்பர் ஒருமுறை சொன்னார், "ப்ரேண்ட்சில் வரும் காட்சிகளை வைத்து இப்படித்தான் எங்கள் சமுதாயம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதே, அது சூப்பர்மேன் படத்தைப் பார்த்து விட்டு அமெரிக்க ஆடவர்கள் உள்ளாடையை ஆடைக்கு வெளியேதான் அணிவார்கள் என்று நினைத்துக் கொள்வதைப் போல".  நம்மூரில் இருக்கும் மேட்டுக்குடி பெண்கள் இந்த நாடகங்களை உண்மை என்று நம்பி பார்த்து விட்டு, தன் வாழ்வை இந்த மிகைப்படுத்தப் பட்ட மாயையால் கொஞ்சம் சீரழித்துக் கொள்கிறார்களோ என்று அவ்வப்போது நான் யோசிப்பேன். 

சரி, சொல்ல வந்த சேதிக்கு வருகிறேன். நான் குறிப்பிட்ட அந்த ஆங்கில நூல், மேலே சொன்ன தொலைகாட்சி தொடர்களின் பாதிப்பினால் எழுதப்பட்டது. நடிகர் விசய், தன்னுடைய எல்லா படங்களிலும் ஒரு குத்துப் பாட்டு வைப்பதைப் போல, இக்கால ஆங்கில எழுத்தாளர்கள் எல்லோரும் எப்பாடுபட்டாவது தங்கள் கதையில் ஐஐடியை செருகி விடுகின்றனர். இந்த கதையின் நாயகனும் அப்படி ஐஐடியில் படித்தவர்தான். அவரும் அவருடைய மனைவியும் பிரிய முயற்சிக்கின்றனர். ஆனால் இந்திய குடும்ப சூழ்நிலைகள் அவர்களை பிரிய விடுகின்றனவா என்பதுதான் கதை. இதை மிக நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். ஆனால் மிக மிகப் போலியான காட்சி அமைப்புகள், கொஞ்சம் கூட நடைமுறைக்கு சாத்தியமில்லாத பணக்காரத்தனம், ஆடம்பரம், வெளிநாடு பயணம் என்று கதை கொஞ்சம் தத்தளிக்கிறது. எழுத்தாளரின் லாவகமான நடைதான் இந்த நூலை பிழைக்க வைக்கும் ஒரே காரணம். 200 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 200 ரூபாய்க்கு விற்கிறது. முதல் பதிப்பில் வெளிவந்த அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்து மறுபதிப்பிற்கு சென்றிருக்கிறது.

இரண்டாவதாக நான் சொன்ன தமிழ் புத்தகம், இரு பெண்களின் போட்டி பற்றி ஆரம்பித்து, அதில் எப்படி ஒரு பெண் இன்னொரு பெண்ணின் மகளை அவளிடம் இருந்து களவாடி, சினிமாவில் இறக்குகிறார் என்றும், அந்த பெண் சினிமாவில் சேர்ந்த பின் என்ன செய்கிறார் என்றும் செல்கிறது. எத்தனையோ பாத்திரங்கள் வந்தாலும் அத்தனையும் மனத்தில் நிற்கின்றது, அழுத்தம் திருத்தமான கதை, அதிர வைக்கும் வசனங்கள், அத்தனை அழகாய் உலக வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி பார்க்க வைக்கும் கதையோட்டம். எழுதியவர் முதியவர் என்பதால் அத்துணை (சரியா சொக்கன் ஐயா ?) அனுபவப் பகிர்வுகள். இந்தக் கதையை படித்து முடித்தவுடன், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ நமக்கு தெரிந்த நபர் என்பது போல் பிரமை ஏற்படும் அளவு உன்னதமான எழுத்து நடை. இந்த நூல் இரண்டு பாகங்களாக வெளி வந்துள்ளது. ஒவ்வொரு பாகமும் சுமார் 150 பக்கங்கள். ஆனால் விலை வெறும் 20 ரூபாய் தான்.


ஆங்கிலத்தில் எழுதியது என்ற ஒரே காரணத்தினால், ஒரு அறிமுக எழுத்தாளரின் சுமாரான நூல் இத்தனை அதிக விலையில் விற்றாலும் மக்கள் வாங்குகிறார்கள். ஆனால் அத்துணை நல்ல எழுத்தாளரின் நூல், தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரே காரணத்தால் விற்க சிரமப்படுகிறது. அண்மையில் நண்பர் கண்ணபிரான் அவர்களை, நீங்கள் ஏன் உங்கள் திருப்புகழ் உரையை நூலாக வெளியிடக் கூடாது என்று கேட்டேன். அதற்கு அவர், பெரிய பெரிய தமிழ் எழுத்தாளர்களின் நூல்களே வெறும் சில நூறுகள் தான் விற்கின்றன, அதனால் வலைப்பதிவாகவே எழுதி விடுவது உத்தமம் என்றார்.

சேத்தன் பகத் போன்ற எழுத்தாளர்களால் உந்தப்பட்டு, மிகக் குப்பையான எழுத்தாளர்கள் பெருகி, நம் இலக்கியத் தரம் குறைந்து கொண்டே வருகிறதோ !? ஆங்கில மோகத்தில்   சிக்குண்ட நாம், நாம் ஆதரவளிக்க வேண்டிய தமிழ் நூல்களையும், எழுத்தாளர்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறோமா !? கல்கி, சாண்டில்யன் என்று ஒரு தலைமுறையிலும், சுசாதா, இராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன் என்று அடுத்த தலைமுறையிலும் (இலக்கியவாதிகளை சேர்க்கவில்லை, பெரும்பான்மை மக்களை தமிழ் படிக்க வைக்கும் எழுத்தாளர்களைப் பற்றி மட்டும் பேசுகிறேன்) உருவான எழுத்தாளர்களைத் தாண்டி, அடுத்த தலைமுறையில் அனைவரையும் கவரும் வகையில் எழுதும் எழுத்தாளர் சமூகத்தையும், அதனினும், தமிழ் படிக்கும் வாசகர் சமூகத்தையும் இழந்து வருகிறோமா !?

7 comments:

Anonymous said...

சு*சா*தா, இராஜே*ஷ்*குமார் :-)

Nikanth Karthikesan said...

சு*சா*தா, இரா*ஜே*ஷ்குமார் :-)

Waiting for your book... will it be in English or Tamil?

BTW I am not a fan of
s/ரா/இரா
s/ஜா/சா

I prefer சுஜாதா, ராஜேஷ்குமார், அத்தனை...
These also cause reduction in Tamil readership!

Sankar P said...

நிகாந்த்: நன்றி. எனக்கும் சுஜாதா, ராஜேஷ்குமார் என்று எழுதுவதுதான் உத்தமம் என்றொரு கருத்து. ஆனால் சில நாட்கள் முன்னாள் ஒருவர், tamil என்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பதை தமிழ் என்று உச்சரிக்கிரீர்களே, அது போல ஏன் சுசாதா என்று எழுதி சுஜாதா என்று உச்சரிக்கக் கூடாது என்று. எனக்கு அவர் அப்படி கேட்டபோது அப்படி எழுதினால்தான் என்ன என்று தோன்றியது. அதனால் இது ஒரு முயற்சி, முதன்முறையாக. சுசாதா அளவிற்கு இராசேசுகுமார் அத்தனை எளிமையாகவும் தோன்றவில்லை. அநேகமாய் சுஜாதா என்று எழுதத் திரும்பி விடுவேன் என்றே நினைக்கிறேன்.

அதே சமயம், முடிந்தவரை கிரந்தம் வரும் சொற்களையும், வடமொழியில் தோன்றிய சொற்களையும் தவிர்க்க முயற்சிக்கிறேன். புத்தகம் என்று எழுதுவதற்கு பதில் நூல் என்று எழுத முயற்சிக்கிறேன். pulveli .com ல் பல நல்ல சொற்கள் உள்ளன. முயற்சித்துப் பாருங்கள்.

என் கதை ஆங்கிலத்தில் தான் இருக்கும், (நீங்கள் குறிப்பிடும் கதை). ஆனால் அதை இன்னும் எழுத (தட்டச்ச) ஆரம்பிக்கவில்லை. அதை தமிழில் எழுதலாமா இல்லை ஆங்கிலத்தில் எழுதலாமா என்று யோசித்தேன். ஆனால் ஆங்கிலத்தில் எழுதும் அளவு சுவாரசியம் தமிழில், அமெரிக்கா தொடர்பான கதைக்கு , கொண்டு வருவது சிரமம். அதனால் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாக முடிவு.

smartassbride said...

" நம்மூரில் இருக்கும் மேட்டுக்குடி பெண்கள் இந்த நாடகங்களை உண்மை என்று நம்பி பார்த்து விட்டு, தன் வாழ்வை இந்த மிகைப்படுத்தப் பட்ட மாயையால் கொஞ்சம் சீரழித்துக் கொள்கிறார்களோ என்று அவ்வப்போது நான் யோசிப்பேன். "

சீரழிவு என்று கூற மாட்டேன், அனால் இவை எந்த விதத்தில் தமிழ் மெகாதொடர்களை காட்டிலும் உயர்வானவை என்று எனக்கு புலபட்டதில்லை. ஆயினும் எனக்கு தெரிந்த வகையில் இது சில பேருக்கு ஒரு அதி தீவிரமான பொழுது போக்கு - facebook போல. ஒரு சிறு வித்தியாசம் சொல்ல வேண்டுமானால் இந்த ஆங்கில டிவி தொடர்கள் நகைச்சுவை தொடர்கள். தமிழில் இப்பொழுது உள்ள தொடர்கள் பெரிதும் பழி வாங்குதல், உறவினர் பகைமை ஆகியவற்றை மையமாய் கொண்டே வருகின்றன.

புத்தகம் படிப்பது- அதாவது popular fiction அல்லாது சீரிய இலக்கிய படைப்புகளை படிப்பது ஒரு பரவலாய் காணப்படும் பொழுதுபோக்கு அன்று. நீங்கள் கூறும் உதாரணங்களில், ஒரு பொழுது போக்கு புத்தகத்தையும் ஒரு நல்ல கதையையும் ஒப்பிட்டு உள்ளீர்கள். இது சரியான ஒப்பிடு என்று எனக்கு தோன்றவில்லை. ஆங்கிலத்திலும் நல்ல இலக்கிய படைப்புகள் அந்த ஆசிரியர் நோபெல் பரிசு பெறும் வரை பெரிதும் விற்பதில்லை.

ஆங்கில மோகம் என்பதை விட, நமது மொழியில் உள்ள நல்ல இலக்கியங்களை/நாவல்களை மொழி பெயர்ப்பு செய்து இன்னும் பலரை சென்றடைய வேண்டிய முயற்சியை நாம் தவற விட்டு வருகின்றோம். எல்லா மொழிகளிலும் வியக்கத்தக்க வகையில் எழுதுபவர்கள் இருக்கிறார்கள். ஜப்பானியர் ஒருவர் (Haruki Murakami) எழுதிய எல்லா நாவல்களையும் நான் படித்து உள்ளேன். இது எனக்கு சாத்தியமானது மொழி பெயர்ப்பினால் தான். கல்கியின் பொன்னியின் செல்வன் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு தற்போது landmark-இல் விற்க படுகிறது. எனக்கு தெரிந்த இருவர்(அவர்களுக்கு தமிழ் சரி வர படிக்க இயலாது) இப்பொழுது அந்த புத்தகத்தை தாமாக விரும்பி படிக்கின்றனர்.

மொழிகளில் உயர்வு தாழ்வு என்று வகை படுத்தும் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னை வருத்தமடைய செய்யும் ஒரு விஷயம் - தாய் மொழியை சரி வர எழுதவோ படிக்கவோ தெரியவில்லை என்றால் அது ஒரு குறையாக கருத படுவதில்லை. எனக்கு தெரிந்த பல பேர் ஆங்கிலத்தில் பிழை செய்தால் பெரிதும் வெட்கப்படுகிறார்கள். அதுவே அவரது தாய் மொழியில் தவறு செய்தால் அது ஒரு cute-ஆன விஷயமாக படுகிறது.

ஆங்கிலத்தின் reach அதிகம். எளிதான மொழியும் கூட. மொழியும் நடையும் எளிதாகுவதாலும் விலை குறைக்க படுவதாலும் இந்த IIT/IIM வகை புத்தகங்கள் விற்று தீர்கின்றன. இவையே ஒரு நல்ல நாவலின் விலையில் விற்பனை செய்யபட்டால் இத்தனை பேர் வாங்குவார்கள் என்பது சந்தேகம். நல்ல புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளோர் இப்பொழுதும் நல்ல புத்தகங்களையே படிக்கின்றனர். இந்த புது வகையறா புத்தகங்கள் படிப்பவர்களை எல்லாம் புத்தகவாதிகள் என்று கூற இயலாது.

Sankar P said...

@அபிராமி:

ஆழமான கருத்துகள். நன்றி :)

நீங்கள் சொல்லும் எல்லா கருத்துகளோடும் நான் ஒத்துப் போகிறேன். நிலைமை நான் நினைப்பது அத்தனை மோசம் இல்லை என்று உங்களின் பின்னூட்டத்தைப் படித்த பின் ஒரு எண்ணம். அந்த இருவரையும் நான் ஒப்பிட்டிருக்கக் கூடாதுதான்.

Haruki Murakami பற்றி நானும் கேள்விப்பட்டேன். ஜெர்மனி நண்பர்கள் சிலரும் இவரின் நூல்களை பெரிதும் பாராட்டி இருந்தார்கள். goodreads-ilum ஏகப்பட்ட பாராட்டுகள். திருமணத்திற்கு பிறகு நூலகத்தில் எடுக்க வேண்டிய நூல்களில் இவருடையதும் இருக்கும்.

என் வலைப்பதிவிற்கு வந்து கருத்து கூறியதற்கு மிக்க நன்றி :-)

Nikanth Karthikesan said...

"ஒரு சிறு வித்தியாசம் சொல்ல வேண்டுமானால் இந்த ஆங்கில டிவி தொடர்கள் நகைச்சுவை தொடர்கள். தமிழில் இப்பொழுது உள்ள தொடர்கள் பெரிதும் பழி வாங்குதல், உறவினர் பகைமை ஆகியவற்றை மையமாய் கொண்டே வருகின்றன."

ஒரு பெரிய வித்தியாசம், தமிழ் தொடர்கள் adultery, premarital செக்ஸ், குடிபழக்கம், போதை பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை தவறு எனவும், வில்லன்/வில்லிகள் செய்யும் செயல்களாகவும் சித்தரிகின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் ஆங்கில தொடர்கள், இவற்றை நகைச்சுவையாக, சமுகத்தில் உள்ள சாதாரண விஷயமாக சித்தரிக்கின்றன. இக்கருத்துக்கள் நம்மையும் அறியாமல் நமது மனதில் பதிகின்றன.

Sankar P said...

@nikanth +1 :-)